அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரிவோம் சந்திப்போம்
Thursday, 17 January 2008
 இரட்டை அர்த்த வசனங்கள்,குத்து பாடல்கள், தொப்புள் தெரியும் ஆட்டங்கள் நிறைந்த இன்றைய தமிழ் படங்களின் வரவுகளுக்கு மத்தியில் எந்தவித விரசமும் இல்லாமல் மீண்டும் ஒரு குடும்பக் கதையை நேர்த்தியாகப் பின்னியிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

இவரது 'பார்த்திபன் கனவு' படம் பலராலும் பாராட்டப்பட்டது. அப்படத்தையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை இயக்கியுள்ளார் பழனியப்பன.

உறவுகள் மொய்க்கும் குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். உறவுகளுக்காகவும், பாசத்துக்காகவும் ஏங்கும் சினேகா சேரன் குடும்ப உறவுகளால் குஷியாகிவிடுகிறார்.

ஆனால், எந்நேரமும் உறவுகளுக்கு மத்தியில் கிடக்கும் சினேகாவுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சேரன். தனிக்குடித்தனம் செல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்நேரத்தில் 'அட்டக்கட்டி' என்ற கிராமத்திற்கு டிரான்ஸ்பர் வருகிறது சேரனுக்கு. இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி சேரன்-சினேகா தனியே சென்று விடுகின்றனர்.

மீண்டும் தனிமை தன்னை தொற்றிக் கொள்ள சினேகா, தனிமை எனும் கொடுமையில் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் தவித்துப் போகிறார்.

இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே  தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

பார்த்திபன் கனவு சினேகா தன் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருந்தார். அதே போல, இப்படத்திலும் நடிப்பில் தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்துள்ளார். மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்த்தி, வெறுமை என எல்லா உணர்வுகளையும் தன் கண்களாலேயே காட்டும் வல்லமை கொண்டவர் சினேகா.

அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் கிடைத்தால் விடுவாரா...?  மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு.

பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம்.

நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.

சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க  விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.

ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.

எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. '

'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.

கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!

இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, தியேட்டரில் ரசிகர்கள் நேரம் போகாமல் தவிக்கிறார்கள்.

'பிரிவோம் சந்திப்போம்'  குடும்ப உறவை விரும்புவர்களுக்கு புரியும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code