|
பக்கம் 1 / 2
பாகிஸ்தானில் குண்டுவெடித்து 8 பேர் பலி
ராவல்பிண்டி : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பேருந்தில் குண்டு வெடித்து எட்டு பேர் பலியானார்கள், பலர் காயமடைந்தனர்.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் அருகே ஆர்.ஏ.,பஜார் என்ற இடத்தில் ராணுவ வீரர்களையும் ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்தில் கடந்த 3ம் தேதி காலை 7.15 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
குண்டுச் சத்தம் பல கிமீ., தொலைவிற்கு கேட்டது. இந்த பலத்த குண்டு வெடிப்பில் பேருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டது. பேருந்து உடைந்து சுக்கு நூறாகச் சிதறியது.
இந்தச் சம்பத்தில் எட்டு பேர் பலியாயினர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதி, இதே இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 60வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இடையே கடந்த 5ம் தேதி 60-வத ு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதிபர் ராஜபக்சே, தலைநகர் கொழும்புவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது :
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டு முக்கியமான சவால்களை எதிர்நோக்கி உள்ளோம்.
ஒன்று தீவிரவாதம் மற்றொன்று வறுமை. இதில் முதலாவதாக உள்ள தீவிரவாதத்தை ஒழிப்பதில் வெற்றியடைந்து இருக்கிறோம். வறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது . இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
தெற்கு அமெரிக்காவில் கடும் சூறாவளி
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட கடும் சூறாவளி மற்றும் புயல் காரணமாக 52 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான இந்த சூறாவளியால் வீடுகள் தரைமட்டமாயின, சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி எறியப்பட்டன.
டென்னஸ்சி மாகாணத்தில் 28 பேரும், அர்கான்சஸ் மாகாணத்தில் 13 பேரும், கென்டுகி மாகாணத்தில் ஏழு பேரும், நான்கு பேர் அல்பாமா மாகாணத்திலும் புயலில் சிக்கி இறந்தனர்.
இந்த மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி காயமடைந்துள்ளனர்.
ஹிலாரி, மெக்கெயின் முன்னிலை வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் நியூயார்க் முன்னாள் மேயர் ஜான் மெக்கெயினும் முன்னிலை பெற்றுள்ளனர்.  . அமெரிக்க அதிபர் பதவிக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மற்றும் கருப்பு இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா ஆகியோரும், குடியரசுக் கட்சி சார்பில் மெக்கெயின், ரோம்னே மற்றும் ஹக்கபீ ஆகியோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.
அதிபர் பதவிக்கு போட்டியிடுவது யார் என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நகரங்களான நியூயார்க், நியூஜெர்சி, டகோடா, இல்லினாய்ஸ், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த ஆறாம் தேதி வாக்கெடுப்பு நடந்தது.
'சூப்பர் டியூஸ்டே' என்று வர்ணிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் மாசாசுசெட்ஸ் மாகாணங்களில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். ஓக்லஹோமா, டென்னசி, அர்க்கன்சாஸ் ஆகிய இடங்களிலும் ஹிலாரி முன்னிலை பெற்றுள்ளார். எனினும் வடக்கு டகோடா, டெலாவேர், அலாபாமா ஆகிய இடங்களில் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார்.
குடியரசு சார்பில் ஜான் மெக்கைன் முன்னிலை பெற்றுள்ளார். நியூயார்க் டெலாவேர், கனெக்டிக்கெட், இல்லினாய்ஸ் மற்றும் நியூஜெர்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ரோம்னே திடீர் விலகல் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து குடியரசுக் கட்சியின வேட்பாளர் ரோம்னே இப்போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் மெக்கெயினுக்கு அடுத்தபடியாக இருந்தார். ரோம்னே விலகலைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மெக்கெயினுக்கு வாய்ப்பு இன்னும் பிரகாசமாகியுள்ளது.
ஹிலாரிக்கு 50 லட்சம் டாலர் கடன் வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு போட்டிக் களத்தில் குதித்திருக்கும் ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரத்திற்காக 50 லட்சம் டாலரைக் கடனாகப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 20 மாகாணங்களில் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் வெற்றி பெற, பிரச்சாரம் செய்வதற்காக 50 லட்சம் டாலர் கடன் வாங்கியிருப்பதாக ஹிலாரி ரோத்தம் கிளிண்டன் தெரிவித்தார். மேலும், இந்த பிரச்சாரத்தைத் தாம் பெரிதும் நம்புவதாகத் கூறினார்.
இந்த வாக்கெடுப்பில் ஒபாமாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று ஹிலாரி முன்னிலை பெற்றுள்ளார். 3 நாட்களில் இணைய தளம் மூலமாக தாம் 30 லட்சம் டாலர் பணம் திரட்ட முயற்சித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'பெனாசிர் சுட்டுக் கொல்லப்படவில்லை'
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, தற்கொலைப் படைத் தாக்குதலிலேயே கொல்லப்பட்டார்.
அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை, என ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தங்களது அறிக்கையில் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் வழக்கை விசாரித்த ஸ்காட்லாந்து போலீசார் தங்களது அறிக்கையை உள்ளூர் போலீசாரிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர்.
கடந்த டிசம்பர் 27ம் தேதி, ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றி விட்டுத் திரும்பும் போது அங்கு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமலேயே புதைத்து விட்டனர். எனவே, பெனாசிர் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டும்,என அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க ஸ்காட்லாந்து யார்டு போலீசார் பாகிஸ்தான் வந்தனர். இவர்கள் பெனாசிர் படுகொலை வழக்கை விசாரித்தனர்.
இந்நிலையில், தங்களது விசாரணையை முடித்த இந்த குழுவினர், வழக்கின் அறிக்கையை உள்ளூர் போலீசாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
உள்ளூர் போலீசார் இந்த அறிக்கையை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ஹமீத் நவாஸ், பத்திரிகையாளர்கள் கூட்டத்தின்போது வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கடந்த 27ம் தேதி ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலின் போதே உயிரிழந்தார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டவில்லை. தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்ந்த போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பெனாசிருக்கு தலையில் பலத்த காயம் ஏபட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தை கடத்த திட்டமிட்ட பெண் கைது வெலிங்டன் : விமானிகளைத் தாக்கி விட்டு நியூசிலாந்து விமானத்தை கடத்த முயன்ற பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நியூசிலாந்தைச் சேர்ந்த விமானம் ஒன்று அதன் தலைநகரான வெலிங்டனுக்கு அருகே பிலன்ஹேம் நகர விமான நிலையத்தில் இருந்து கிறைஸ்ட் சர்ச் என்ற நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஏழு பயணிகள் மட்டுமே இருந்தனர்.
பயணிகளில் ஒரு பெண், திடீரென விமான கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து விமான ஓட்டிகள் இருவரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதையடுத்து, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்டதும் அதிலிருந்த பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். பயணிகளில் நான்கு பேர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஆஸ்திரேலியா மற்றும் இன்னொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.
பிலன்ஹேம் நகரவாசியான அந்த பெண் சோமாலியா நாட்டை பூர்வீகமாக கொண்டவர். அந்தப் பெண்ணிடம்போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பெண் நடத்திய தாக்குதலில் விமானிக்கு கையில் கடுமையான காயமும், துணை விமானிக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.
பாகிஸ்தானை இயக்கும் ஒசமா வாஷிங்டன் : பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் மறைந்து கொண்டு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை ஒசாமா இயக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது :
முல்லா உமர் மற்றும் சில தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து கொண்டு தலிபான் படைகளை வழிநடத்தி வருகின்றனர்.
ஒசாமா பின்லேடனும், துணைத் தலைவரான அல் ஜவாஹிரி ஆகியோர் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் இருந்து கொண்டு பாகிஸ்தானை ஆட்டுவிக்கின்றனர்.
தேடப்பட்டு வரும் ஒசாமா, அல் ஜவாஹிரி, அல் லிபி, அபு லைத் ஆகியோர் இந்தப் பகுதியில்தான் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் அல் லிபி கடந்த ஜனவரியின் போது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி பலியானார்.
ஆனால், மற்றவர்கள் அப்பகுதியில் இருந்து கொண்டுதான் பாகிஸ்தானை இயக்கி வருகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
ருவாண்டாவில் பூகம்பம் : 39 பேர் பலி கிகாலி : ருவாண்டா மற்றும் அதையொட்டி உள்ள காங்கோவில் கடந்த திங்கள் கிழமை இரவு அடுத்தடுத்து இரண்டு கடும் பூகம்பங்கள் தாக்கியது.
இந்த பூகம்பத்தில் சிக்கி தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 380 பேர் காயமடைந்தனர்.
காங்கோவில் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவான முதல் பூகம்பம் தாக்கியது என்றும், இதையடுத்து சில மணி நேரங்களில் ருவாண்டாவின் எல்லை மாவட்டமான ருசிசியில் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவான இரண்டாவது பூகம்பம் தாக்கியதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ருவாண்டாவில் தாக்கிய பூகம்பத்தில் 34 பேர் உயிரிழந்ததாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது பூகம்பம் காரணமாக அந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில்
பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலர் உயிரிழந்ததாக அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டாவின் எல்லைக்கு வெளியே புகாவு என்ற இடத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த பூகம்பத்தில் ருவாண்டா தலைநகர் கிகாலியில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
|